ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கான கடல் பயணத்தை மேற்கொண்ட முதல் சுற்றுலாப் பயணியான வாஸ்கோ ட காமாவின் கல்லறையைப் பார்வையிடும் ஆசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தத் தகவலை வாஸ்கொடகாமாவின் கல்லறை வைக்கப்பட்டுள்ள மடத்தின் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த பிலோமெனா மடோஸ், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வாஸ்கோ ட காமா போர்த்துக்கல்லைச் சேர்ந்தவர். இவர் 1498 ஆம் ஆண்டு மே மாதம் கடல் வழியே பயணம் செய்து இந்தியாவின் கோழிக்கோடு துறைமுகத்தை அடைந்தார். இவரது இந்தப் பயணமே ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கான நீர்வழிப் போக்குவரத்தைத் ஆரம்பித்தது.
அதன்பின் 20 வருடங்கள் கழித்து 1524ஆம் ஆண்டு இந்தியாவின் கொச்சி வந்திறங்கிய அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மரணமடைந்தார். பின்னர் 1539ஆம் ஆண்டில் அவரது உடல் போர்த்துக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு ஜெரோநிமோஸ் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அண்மைக்காலமாக இந்தக் கல்லறையைப் பார்வையிடுவதற்காக இந்தியாவின் கோவா மாநிலத்திலிருந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதுபோல் ஜப்பான்- தாய்லாந்து நாடுகளில் இருந்தும் மக்கள் தினசரி வரத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்ய வரும் இந்தியர்கள் அனைவரும் வாஸ்கோ ட காமாவின் கல்லறையைப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர் என்று மடோஸ் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில் 15,000 இந்தியர்கள் அங்கு வருகைதந்து சுமார் 2 மில்லியன் யூரோக்களை செலவிட்டதாக கூறப்படுகின்றது.
இவரின் கண்டுபிடிப்புக் காலத்தின்போது, போர்த்துக்கல்லுக்கு இருந்த அதிகாரத்தையும் செல்வ வளத்தினையும் வெளிப்படுத்தும் ஒரு சின்னமாக வாஸ்கோ ட காமாவின் கல்லறை அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

0 comments:
Post a Comment