தான் இயக்கும் இடம்பொருள் ஏவல் படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடலை இளையராஜாவைப் பாட வைக்க இயக்குநர் சீனு ராமசாமி முயற்சி மேற்கொண்டார்.
அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதைப் பார்த்ததும் டென்ஷனாகிவிட்டாராம் இளையாராஜா.
தன் கோபத்தை, இளையராஜா ஃபேன்ஸ் கிளப் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தன்னுடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இளையராஜாவின் ஒப்புதலுடன் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் வெளியிட்ட அந்த செய்தியில், வைரமுத்து அதிகபட்சமாக சாடப்பட்டிருக்கிறார். வைரமுத்துவையும், இளையராஜாவையும் கைகுலுக்க வைக்கும் இணைப்பு முயற்சியை செய்த சீனு ராமசாமியையும் இளையராஜாவின் கோபம் விட்டுவைக்கவில்லை.
அவரும் அநியாயத்துக்குக் கண்னத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தில் சம்பந்தமே படாத இயக்குநர் பாலாவுக்கும் அந்த அறிக்கையில் அர்ச்சனை நடத்தப்பட்டுள்ளது.
அதாவது, தாரை தப்பட்டை படத்தில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்க முயற்சி செய்தாராம் பாலா. அதற்கு கடுமையாய் ரியாக்ட் பண்ணி இருக்கிறார் இளையராஜா. இயக்குநர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் எப்படியேனும் இளையராஜா இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்துவிட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால் அப்படியொரு ஆசை இருந்தால் வேறு யாரையாவது வைத்து இசையமைத்துக் கொள் என்று பாலாவிடம் இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார். அதன் பிறகே வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும் முயற்சியை தவிர்த்துள்ளார் பாலா'' என்று அந்த அறிக்கையில் பாலாவையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் அமைப்பினர்.
இந்த விஷயம் பாலாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. கடுப்பான பாலா இதுகுறித்து இளையராஜாவிடம் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

0 comments:
Post a Comment