உயிர் வாழ மிகவும் இன்றியமையாத ஒன்று உணவும், தண்ணீரும்.
பசியால் எந்த உயிரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் திகதியன்று உலக உணவு தினமாக (World Food Day) கடைபிடிக்கப்படுகிறது.
1979ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தொடங்கியதை நினைவு கூறவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
உலகில் வாழும் மக்களில் ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை.
உலகில் பல கோடி பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆண்டுதோறும், பல கோடி மக்கள் பட்டினியால் மரணத்தை தழுவுகின்றனர்.
வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், உணவு உற்பத்தி குறைவு போன்றவை விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பதால் ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது பகல் கனவாகி போகிறது.
உலக வங்கி அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால், உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபை உணவு பிரச்சனைகள் தொடர்பான ஒரு கருத்தை தெரிவு செய்து அதனை மையமாக வைத்து செயல்படுவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்டொருக்கும் மையக் கருத்து ‘’குடும்ப விவசாயம்” என்பதாகும்.
எனவே இந்த ஆண்டு உணவு பாதுகாப்பை அதிகரிக்க, விவசாயத்தை மட்டுமில்லாமல் குடும்ப விவசாயத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
குடும்ப விவசாயத்தின் மூலம் முக்கியமாக கிராமங்களில் வறுமையை ஒழிக்க முடியும் என்றும் சத்தான உணவு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
எனவே மக்களாகிய நாம் அனைவரும் இந்த நாளில், உலகில் நிலவும் வறுமையை ஒழித்து அனைவருக்கும் மூன்று வேளை நல்ல உணவு கிடைக்க நம்மால் ஆன நல்ல காரியங்களை செய்வோம் என்று உறுதி எடுத்து கொள்வோமாக!!!

0 comments:
Post a Comment