கோவை அருகே ரூ.15 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட ஊர்தி கவிழ்ந்து பணம் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் இருந்து ரூ.15 கோடி பணம் 6 பெட்டிகளில் ஏற்றப்பட்டு கேரள மாநிலம் திருச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வங்கி அதிகாரி பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் ஊர்தியில் இருந்துள்ளனர்.
மதுக்கரை பாஸ்ரோடு, பாலத்துறை அருகே சென்றபோது, பாலக்காட்டில் இருந்து வந்த கார் ஒன்றின்மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் ஊர்தியை திருப்பியுள்ளார்.
எனினும் எதிர்பாராதவிதமாக அந்த காரில் மோதி அந்த ஊர்தி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக சவுத் இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணம் இருந்த வேனை சுற்றி நின்று பாதுகாத்துள்ளனர்.
இதன்பின் அந்த பணப்பெட்டிகள் மற்றொரு ஊர்திக்கு மாற்றப்பட்டு திருச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:
Post a Comment