நடிகர் தனுஷின் ‘மரியான்’ படத்திற்கு பின்னர் தமிழில் பாடல்களை தராத இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ‘காவியத்தலைவன்’ படத்தின் பாடல்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 18-ம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர் இதனை தொடர்ந்து ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
‘அரவான்’ திரைப்படத்திற்குப் பின்னர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”. இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிருத்விராஜ்- நாசர்- அனைகா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏற்கெனவே 6 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்தக் கால இசை மற்றும் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். எனவே- இப்படத்தின் பாடல்கள் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment