விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றாமல் அதைப் புகைப்படம் எடுத்த இளைஞர்களை நினைத்து வெட்கி தலைகுனிந்தேன் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ். மாதாப்பூரில் இருந்து சிலபரமம் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. ஹை டெக் சிட்டி அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது சிக்னலில் நிற்க டிரைவர் பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த பஸ் வேகமாக காரின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்புறம் நொறுங்கியது.
பக்கத்தில் நின்ற ஆட்டோ, டூவீலர், ஒரு பெண், ஆறு வயது சிறுமியையும் இடித்து தள்ளியது பஸ். இந்த விபத்தில் பிரகாஷ் ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரில் இருந்த குடும்பத்தினரை கீழே இறக்கி ஆட்டோவில் அனுப்பி வைத்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி ட்விட்டரில் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:
பயங்கரமான விபத்தில் இருந்து தப்பினேன். விபத்து நடந்தபோது கார், ஆட்டோ, டூவீலரில் இருந்து சிலர் தூக்கி வீசப்பட்டனர். யாரும் காப்பாற்ற முன் வரவில்லை.
இது அதிர்ச்சியளித்தது. அந்தப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் காப்பாற்றாமல் விபத்தை செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து வெட்கி தலைகுனிந்தேன். உயிர் பிழைத்த பயத்தைவிட இளைஞர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறார்களே என்ற பயம்தான் அதிகமாக இருந்தது. நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்? நமக்கு என்ன ஆனது?இவ்வாறு கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment