தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்கட்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை பிரதமர் மோடியைப் பார்த்து பின்பற்றவேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 68-வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, இந்தியாவை உலக அரங்கில் முதன்மை நாடாக அழைத்துச்செல்லும் குறிக்கோளுடன் பிரதமர் மோடி ஆற்றிய உரை இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
வேற்றுமைகளை மறந்து அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும், எதிர்கட்சிகளும் நாட்டின் வளச்சிபாதையில் இணைவதில்தான் வெற்றி அடங்கியுள்ளது என்று பேசி உள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்தவுடன் கருவேப்பிலையை போல கூட்டணியில் இருந்து எதிர்கட்சிகளை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு எதிர்கட்சிகள் மக்கள் மன்றத்தில் பேசினால் வழக்கு, சட்டமன்றத்தில் பேசினால் வெளியேற்றம், இடைநீக்கம் என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்துக்கொண்டு இருக்கிறாரே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதை என்னவென்று சொல்வது.
கூட்டணியில் இருந்த கட்சிகளை கூட ஒன்றிணைத்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இவர் எங்கே? தன்னை எதிர்த்து நாடுமுழுவதும் போட்டியிட்ட கட்சிகளை அரவணைத்து செல்லும் பாரத பிரதமரின் மாண்பு எங்கே?
மேலும், எதிர்கட்சிகளை எப்படி நடத்த வேண்டும், மதிக்க வேண்டும், அரவணைத்து செல்ல வேண்டும், ஒன்றிணைந்து செயல்பட வைக்கவேண்டும் என்பது போன்ற நல்ல பல விடயங்களில் பிரதமரை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றினால் தமிழக அரசியல் நாகரிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மோடியிடம் ஜெயலலிதா பாடம் கற்கவேண்டுமாம்! விஜயகாந்த்!
ReplyDelete