சர்ச்சைக்குள்ளாகியுள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,
தீபாவளிக்கு கத்தி மற்றும் புலிப்பார்வை படங்கள் வெளியாகின்றன. இவற்றில் தமிழர் கலாசாரம், தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போர் பற்றி நிலவும் உணர்வுகளை மோசமாக சித்தரித்துள்ளனர்.
கத்தி படத்தை ஐங்கரன் இன்டர்நெஷனல் சார்பில் கருணாமூர்த்தி, லைகா தயாரிப்பாளர் கரண் தயாரிக்கின்றனர், இதில் இலங்கையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள், கணவர்களுடன் அமைதியாக வாழ்கின்றனர். தமிழர், சிங்களவர் ரத்தக் கலப்பில் புதிய இனம் உருவாவதுபோல் சித்தரித்துள்ளனர்.
புலிப்பார்வை படத்தை வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. இதில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது குறித்து, மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததால், சீன இராணுவம் கொன்றதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் பாதி கற்பனையே.
இரு படங்களிலும் தமிழர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். இந்தப் படங்கள் வெளியானால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். திரைப்பட தணிக்கைக்குழுவின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக, இரு படங்களையும் உருவாக்கியுள்ளனர். எனவே, கத்தி, புலிப்பார்வை படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். டி.ஜி.பிக்கு முறைப்பாடு செய்துள்ளேன். இதற்கான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என குறித்த வழக்கறிஞர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதிபதி என்.கிருபாகரன் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் வழக்கில் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார்.
குறித்த இரண்டு படங்களுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், தற்போது சட்டம் எவ்வாறு இதனைக் கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

0 comments:
Post a Comment