விஜய் தொலைக்காட்சியில் நன்கு அறிமுகமான மா.கா.பா. ஆனந்த் தமிழ்த் திரைப்படமொன்றில் கதாநாயகனாக நடித்து வருவதாக அந்தத் தொலைக்காட்சி ஏற்கனவே விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டது.
எனினும், அந்தப் படத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் முழுமையாக வெளிவந்திருக்கவில்லை.
“அரிதுஅரிது, ஈசா” ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள E 5 என்டர்டெயின்மென்ட் ஜெ. ஜெயகிருஷ்ணன், இமேஜினரி மிஷன்ஸ் கார்த்திகேயனுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘அட்டி’.
“மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன்”, ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த விஜயபாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்திலேயே மாகாபா ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடிக்கிறார்.
“சித்தரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள்” ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார். சினேகன், அண்ணாமலை, விஜயசாகர், கவிவர்மன், மதன் கார்க்கி, கானா வினோத் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் அவனது நண்பர்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம். வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது.
அந்தப் பிரச்சனையை கதாநயாகன் எப்படி சமாளித்தான் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லும் படம்தான் ‘அட்டி’.
வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் படத்தொகுப்பை கவனிக்க, பவர் பாண்டியன் சண்டைப் பயிற்சி அமைக்கிறார்.
படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.



0 comments:
Post a Comment