14 வயது சொந்த மகளை 45 வயது தந்தை கடந்த ஒருவருட காலமாக பாலியல் பலாத்காரம் செய்துவந்த அருவருக்கும் செய்தியொன்று பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது இளம்பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போளூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைச் செய்துள்ளார். இதில், பெற்றெடுத்த தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் அதற்கு சகோதரும் உடந்தையாக செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.
இந்த வாக்குமூலத்தினால் பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி போளூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
புகார் கொடுத்த கீதாவின் தந்தைக்கு 45 வயது. லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். அப்போது மகனும், மகள் கீதாவும் சிறுவன், சிறுமியாக இருந்தனர். அவர்களை சிறுவள்ளூரில் வசிக்கும் பாட்டி பொறுப்பில் விட்டு தந்தை லாரி ஓட்டச் சென்று விடுவார்.
நீண்ட நாள் கழித்துதான் ஊர் திரும்புவார். இதனால் கீதாவை பாட்டி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். பள்ளி விடுதியிலேயே கீதா தங்கி படித்து வந்தாள். தற்போது கீதா 10–ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார்.
இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் கீதாவை, குறித்த தந்தையான லாரி டிரைவர் போளூரில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தந்தையின் கொடுமையை வெளியில் சொன்னால் அவமானம் என்று கருதி, மௌனம் காத்துள்ளார்.
ஆனால் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லாரி டிரைவர் மீண்டும் மீண்டும் லாட்ஜில் அறை எடுத்து, தனது மகளை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு ஆண்டாக இது நீடித்து வந்துள்ளது. தந்தையின் கொடுமை எல்லை மீறி தொடரவே, குறித்த இளம்பெண், துணிந்து போளூர் நிலையம் சென்று பொலிஸ் நிலையத்தில் புகாராக எழுதிக் கொடுத்தாள். போளூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி இதுபற்றி விசாரணை நடத்தினார்.
தந்தை தன்னை கொடுமைப்படுத்தும் விடயத்தை கீதா அண்ணனிடம் கூறியுள்ளாள். ஆனால் அவனும் அதனைக் கண்டு கொள்ளாததுடன் தந்தைக்கு ஆதரவாக பேசியுள்ளான். தந்தையின் மிரட்டலுக்குப் பயந்து, இதனைப் பாட்டியிடம் கூட அவள் சொல்லியிருக்கவில்லை.
போளூரில் லாரி டிரைவர் ஒரே லாட்ஜில் அறை எடுக்காமல் 2 லாட்ஜில் மாறி மாறி தங்கி இருந்துள்ளார். இதனால் லாட்ஜ் ஊழியர்களுக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை.
இதையடுத்து தந்தை மீது, கற்பழிப்பு, பெண் மீதான பலாத்காரம், சிறுவருக்கு எதிரான பாலியல் குற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சகோதரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தையும், சகோதரனும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இருவரும் போளூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தந்தையை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சகோதரனுக்கு 17 வயது என்பதால் கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட கீதாவும் போளூர் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டாள்.

0 comments:
Post a Comment